சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

by Staff Writer 02-08-2018 | 5:57 AM
Colombo (NEws 1st) சிறைச்சாலை அத்தியட்சகர்கள், உதவி அத்தியட்சகர்கள் மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 12 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு செயற்பாட்டின் கீழ் பல வருடங்களாக முழுமைப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில், தேவையான மனித வளங்களுக்கு ஏற்ப இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மஹர சிறைச்சாலையின் விசேட தரத்தில் செயற்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ரி.ஐ. உடுவர வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, கொழும்பு விளக்கமறியல் சிறையின் அத்தியட்சகர் கே.ஏ.எஸ். கொடித்துவக்கு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோன்று, வெலிக்கட சிறைச்சாலையின் பதில் அத்தியட்சகர் ஏ.ஜீ. சுதத் ரோஹண அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வவுனியா சிறைச்சாலையின் பதில் அத்தியட்சகர் டப்ளியூ.ஜீ.எவ். பெர்னாண்டோ பதுளை சிறைச்சாலைக்கும் அநுராதபுரம் சிறைச்சாலையின் பதில் அத்தியட்சகர் எல்.ஜே.எம்.கே. பண்டார கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.