வௌிநாட்டிலிருந்து வந்த 10 பேர் விபத்தில் காயம்

விமானப் படை பஸ்ஸூடன் மோதி விபத்து: வௌிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர் காயம்

by Staff Writer 31-07-2018 | 8:08 PM
Colombo (News 1st)  அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கல்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை விமானப் படையின் பஸ் ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்றோடு மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. வௌிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே வேனில் இருந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த 8 பேர் பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறினார். விபத்து தொடர்பில் விமான படையின் பஸ் சாரதி நொச்சியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நாளை (01) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.