தொழிலாளர் நீதிமன்ற வழக்குகளிலிருந்து விலகல்

தொழிலாளர் நீதிமன்ற வழக்குகளிலிருந்து விலகத் தீர்மானம்

by Staff Writer 31-07-2018 | 10:58 AM
Colombo (News 1st) தொழிலாளர் நீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளிலிருந்தும் விலகுவதற்கு அரச சேவைகள் தொழில் அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலஞ்ச ஆணைக்குழுவினால் தமது அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (30) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் இரேஷ் சிந்தக கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இலஞ்சம் பெற்றமை தொடர்பில் நுவரெலியா மற்றும் கல்முனை தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் இருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று (30) கைது செய்யப்பட்டனர். நுவரெலியா தொழிலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு சாட்சி வழங்குவதற்காக, நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் கையூட்டு பெறப்பட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரி 1,000 ரூபா மற்றும் கல்முனை தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரி 8,000 ரூபா கையூட்டும் பெற்றுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.