வாக்காளர் இடாப்பின் திருத்தப்பணிகள் நிறைவு

2018ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் திருத்தப்பணிகள் நிறைவு

by Chandrasekaram Chandravadani 30-07-2018 | 6:40 AM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் திருத்தவேலைப்பணிகளின் முதற்கட்டப் பணிகள் தற்போது நிறைவுக்கு வரவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களைப் பகிர்ந்தளித்து, தகவல்களைத் திரட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் இதன் 2ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்கள், புதிதாக உட்சேர்க்கப்பட்ட வேண்டிய பெயர்கள் என்பவற்றை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல்கள் மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூர் அதிகாரசபை அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இந்தப் பட்டியல்களைப் பரிசீலணை செய்வதன் மூலம், எவரேனும் தகைமையுள்ள ஒரு வாக்காளரின் பெயர் 2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்படவில்லை என தெரியவருமிடத்து, அவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. அதேநேரம், தகைமையற்ற ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பின் அவருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் அவகாசம் உள்ளது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.