ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு குறித்து கட்டளை

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கக் கட்டளை

by Staff Writer 30-07-2018 | 10:18 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கக் கட்டளை ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (30), பிரதிவாதியான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் கையளித்துள்ளது. அத்தோடு, இந்த வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள அவதூறு தொடர்பில் ஏன் தண்டனை வழங்கக்கூடாது என வினவும் குறித்த கட்டளை தொடர்பில் நீதியரசர்கள் குழாம் திருப்திகொள்ளும் பட்சத்தில் குறித்த கட்டளையிலுள்ள குற்றச்சாட்டுகளின்பேரில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் ஜனாதிபதி செயலகத்தினருகே பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இலங்கையின் அநேகமான நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஊழல்வாதிகள் என வௌியிட்ட கருத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை பரிசீலித்த பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியசர்கள் குழாம் அந்த கூற்றினால் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்தது. பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏனைய செய்திகள்