கூட்டு ஒப்பந்த வழக்கு தொடர்பில் மேன்முறையீடு

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

by Bella Dalima 26-07-2018 | 5:47 PM
தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த வழக்கை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி இளையதம்பி தம்பையா நேற்று முன்தினம் (24) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்திருப்பதாவது,
கூட்டு ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் உரிமை எனக்கு இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 12 ஆம் திகதி முதன்நிலை ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இந்த தள்ளுபடி செய்த கட்டளையானது சட்டத்திற்கு முரணானது . அதாவது தொழில் ஆணையாளர் என்பது ஒரு பகிரங்க அரசாங்க அதிகாரி. அவரால் வௌியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் என்பது ஒரு அரசாங்க ஆவணம். அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு சட்ட அந்தஸ்த்தைக் கொடுக்கும் ஆவணம் என்ற அடிப்படையில், அதனை ரிட் மனு மூலம் இரத்து செய்வதற்கு உரிமை இருக்கிறது. ஒரு பொதுமகன் என்ற அடிப்படையிலும், தொழிற்சங்கவாதி, சட்டத்தரணி என்ற அடிப்படையிலும் பொதுநலன் அக்கரையாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. எனவே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்ற அடிப்படையில், நாங்கள் தற்போது உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் கம்பனிகளின் அச்சுறுத்தலுக்கு அச்சப்படாமல், இந்த கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்து அதிலிருந்து வௌியேறி, புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான வரைவைத் தயாரித்து அதற்கான பேரப்பேச்சிற்கு செல்ல வேண்டும்.

ஏனைய செய்திகள்