சதொசவில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் முறிவுகள்

சதொச வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்

by Staff Writer 26-07-2018 | 12:29 PM
Colombo (News 1st) மன்னார் சதொச கட்டட வளாகத்தில் 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின்போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாகவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், எந்தவொரு எலும்புக்கூட்டிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 55 மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஒரு தொகை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்குள் 6 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றன. இவர்களின் உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சடலங்கள் எந்தக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரையில் உறுதியாக கண்டறியப்படவில்லை.