வேல் பெருமான் கதிர்காமத்தில் எழுந்தருளினார்

பவனி நிறைவு: வேல் பெருமான் கதிர்காமத் திருத்தலத்தில் எழுந்தருளினார்

by Staff Writer 25-07-2018 | 7:14 PM
Colombo (News 1st)  கந்தபுராணத்துடன் தொடர்புடைய தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட வேல் பவனி இன்று இனிதே நிறைவடைந்தது. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனியில் வலம் வந்த வேல்பெருமான், கதிர்காமத் திருத்தலத்தில் இன்று எழுந்தருளினார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலுக்கு இன்று காலை செல்லக்கதிர்காமத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. செல்லக்கதிர்காமத்தில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் எழுந்தருளிய வேல் பெருமானுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் வேல் பெருமான் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தார். செல்லக்கதிர்காமத்திலிருந்து, கதிர்காமத்தை சென்றடைந்த வேல் பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கும் கிட்டியது. கதிர்காமத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தேவஸ்தானத்தில் வேல் பெருமான் எழுந்தருளினார். கதிர்காமத் திருத்தலத்தில் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யும் கப்புறாளையால் மூலஸ்தானத்தில் பூஜைகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய ஆடிவேல் விழாவை, ஆடிவேல் சக்திவேல் விழாவாக மகாராஜா நிறுவனம் இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்திருந்தது. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனி நேற்றிரவு செல்லக்கதிர்காமம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.