by Staff Writer 25-07-2018 | 7:09 AM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடமும் பகிடிவதை தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பகிடிவதைகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதால் இது தொடர்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சினூடாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.