அர்ஜூன ரணதுங்கவை ஜனாதிபதி எச்சரித்தாரா?

அர்ஜூன ரணதுங்கவை ஜனாதிபதி எச்சரித்தாரா?

by Bella Dalima 25-07-2018 | 9:20 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பாக நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். விவாதம் எதுவும் நடக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சர் அவ்வாறு விளக்கமளித்தாலும் இன்று லக்பிம பத்திரிகையின் முன்பக்கத்தில், விளையாட்டுத்துறையில் தலையிடாது தம்முடைய வேலையைப் பார்க்குமாறு அர்ஜூன ரணதுங்கவிற்கு ஜனாதிபதி கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அமைச்சரவைக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற காரசாரமான வாக்குவாதத்தின் போது, ஜனாதிபதி இதனைக் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சரவை பேச்சாளரற்ற, வேறு பெயருடைய சட்டத்தரணி அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவர் இந்தச் செய்தியை திரிபுபடுத்தி பத்திரிகைக்கு கூறியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.