நுண் கடனுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி

நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 24-07-2018 | 7:10 PM
Colombo (News 1st)  நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான முன்மொழிவு தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார். இதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறித்த நுண் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடனை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த பெண்களுக்கு வழங்கப்பட்ட 1 இலட்சம் வரையிலான கடன் தொகையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களிலுள்ள பெண்கள் நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள ஏனைய நுகர்வுகளுக்கு அல்லாத கடன்களை இரத்து செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருணாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடன் பெற்ற பெண்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. இரத்து செய்யப்படும் 1 இலட்சம் வரையிலான கடன் தொகையை திறைசேரியினூடாக நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.