மொஸாம்பிக்கிற்கு அனுப்பப்படும் யானைகள்

தென் ஆபிரிக்காவிலிருந்து மொஸாம்பிக்கிற்கு அனுப்பப்படும் யானைகள்

by Chandrasekaram Chandravadani 24-07-2018 | 10:23 AM
தென் ஆபிரிக்காவிலிருந்து மொஸாம்பிக்கிற்கு 200 யானைகளைக் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைரம் தயாரிக்கும்  நிறுவனமான டி பியெர்ஸ் தெரிவித்துள்ளது. டி பியெர்ஸ் வைர சுரங்கத்தொழில் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான தென் ஆபிரிக்காவிலிலுள்ள வெனெடியா லிம்பொபோ (Venetia Limpopo) எனும் பகுதியில் யானைகள் அதிகமாக இருப்பதாகவும் அவற்றினால் சுற்றுச்சூழலிற்கு சேதம் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வேட்டையாடப்படுவதால் மொஸாம்பிக்கிலுள்ள யானைகள் அழிவடையலாம் என அச்சுறுத்தப்படுகின்றது. இந்தநிலையில், இம்மாதம் மற்றும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதங்களில், மொஸாம்பிக் அரசிற்கு சொந்தமான ஸினாவே தேசிய பூங்காவிற்கு 60 யானைகள் அனுப்பப்படவுள்ளதாகக் கூறிய குறித்த நிறுவனம், ஏனைய 140 யானைகளும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டிலிருந்து, இடவசதி உள்ள பூங்காக்களிற்கு அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளது. மொஸாம்பிக்கில், தந்தத்திற்காக யானைகள் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. மொஸாம்பிக்கின் நியாஸ்ஸா எனும் தேசிய பூங்காவில், 2007ஆம் ஆண்டிலிருந்து சுமார் 11,000 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.