திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-07-2018 | 7:20 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மொரகஹகந்த – களு கங்கை திட்டத்தின் நீர் நிரப்பும் நிகழ்வும் களு கங்கை சுரங்கப் பாதையின் இரண்டாம் கட்டப்பணிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (23) நடைபெற்றது. அத்தோடு, மொரகஹகந்த நீர்த்தேக்கம் 'குலசிங்க நீர்த்தேக்கம்' எனவும் பெயரிடப்பட்டது. 02. வட மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வௌியிட்டிருந்த வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடித்துள்ளது. 03. நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்தமையினாலேயே,சொத்து விபரங்களை வெளியிட மறுத்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் தெரிவித்துள்ளார். 04. வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலப்பனைத் தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதி ஆகியோருக்கு நுவரெலியா மேல்நீதிமன்றம் 12 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 05. தவணைப்பரீட்சைப் பெறுபேறுகளை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களிற்கு வழங்குமாறு, கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி பாடசாலை அதிபர்களை அறிவுறுத்தியுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பரஸ்பர எச்சரிக்கைகளினால் இரு நாடுகளுக்குமிடையில் பதற்றநிலை உருவாகியுள்ளது. 02. மலேரியா நோயைப் பரிசோதிப்பதற்கான மருந்திற்கு, 60 வருடங்களில் முதற்தடவையாக அமெரிக்க அதிகாரிகளால் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.