சூசையின் வர்த்தகத்திற்கு அதிகாரிகள் உதவி

சூசையின் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அதிகாரிகள் உதவி

by Staff Writer 24-07-2018 | 1:25 PM
Colombo (News 1st) சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹெரோயின் வர்த்தகரான சூசைக்கு, அதிகாரிகள் சிலர் உதவி புரிந்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சூசையின் பிரதான உதவியாளரான மொஹமட் மாஹிரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்ததையடுத்து இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சூசை என அழைக்கப்படும் தர்மராசா சுசேந்திரனின் பிரதான உதவியாளரான மொஹமட் மாஹிரின் கையடக்கத் தொலைபேசியில், சிறைச்சாலை அதிகாரிகள் எண்மரின் தொலைபேசி இலக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சூசையிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தேகநபர்களுடன் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக தொடர்புகளைப் பேணிய சிறைச்சாலை அதிகாரிகள் எண்மர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு, 2 கிலோ 200 கிராம் ஹெரோயினுடன் பம்பலப்பிட்டி பகுதியில் சூசை என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, மேற்கொண்ட வழக்கு விசாரணைகளின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.