கிரீஸில் பரவிய காட்டுத்தீயால் 50 பேர் பலி

கிரீஸில் பரவிய காட்டுத்தீயால் 50 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 24-07-2018 | 9:02 AM
கிரீஸில் பரவியுள்ள காட்டுத்தீயால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிகாரிகள், சர்வதேச ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. கிரீஸ் தலைநகர் ஏதேனஸிற்கு அருகில் ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள அதேநேரம், அங்குள்ள வீடுகளிலிருந்து மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சிறுவர்கள் உட்பட மொத்தமாக 49 பேர் பலியாகியுள்ளதாக தீயணைப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், மாட்டி (Mati) என்ற கடற்கரைக் கிராமத்திலிருந்து 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார். அதேநேரம், 16 சிறுவர்கள் உட்பட 104க்கும் அதிகமானோர் இதில் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் அரச பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.