by Staff Writer 24-07-2018 | 7:25 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை வடக்கு பகுதியில் மீனவர்கள் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.
குறித்த இந்திய மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அண்மையில், கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களுக்கும் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வருடத்தின் இதுவரையாக காலப்பகுதியில் கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 79 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் வடுவிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.