மலேரியாவை சோதிப்பதற்கான மருந்திற்கு அனுமதி

மலேரியாவை சோதிப்பதற்கான மருந்திற்கு அமெரிக்கா அனுமதி

by Chandrasekaram Chandravadani 23-07-2018 | 10:11 AM
மலேரியா நோயைப் பரிசோதிப்பதற்கான மருந்திற்கு 60 வருடங்களில் முதற்தடவையாக அமெரிக்க அதிகாரிகளால் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. டஃபினொக்யூன் (Tafenoquine) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டமை மிகப்பெரியதொரு சாதனை என விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் 8.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்ற, ஒரு தடவை வந்தால் மீண்டும் ஏற்படக்கூடிய மலேரியா நோய்க்கானது. Tafenoquine ஐ தமது மக்களிற்கு பரிந்துரை செய்யமுடியுமா என உலகம் முழுவதிலுமுள்ள மேற்பார்வையாளர்கள் நோக்குகின்றனர். ஆபிரிக்காவின் துணை சஹாராவிற்கு வெளியே பொதுவாக 'பிளாஸ்மோடியம் விவக்ஸ்' (plasmodium vivax) எனும் ஒட்டுண்ணியாலேயே மலேரியா பரவுகிறது. நுளம்பொன்று ஒருதடவை கடிப்பதன் மூலம் மலேரியா நோய்த் தொற்றுகள் பல ஏற்படுவதால் குறிப்பாக சிறுவர்கள் பாதிப்படையக் கூடும். கல்லீரலில் மறைந்துள்ள ஒட்டுண்ணியை அழிக்கக்கூடிய Tafenoquine மருந்திற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. கல்லீரலில் மறைந்துள்ள மலேரியா ஒட்டுண்ணியை அழிப்பதற்கு ஏற்கனவே ப்ரைமாகுயின் (Primaquine) எனும் மருந்து பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், Primaquine மருந்தின் வில்லையை 14 நாட்களிற்கு எடுக்கவேண்டிய தேவை உள்ள அதேநேரம், Tafenoquine மருந்து வில்லை ஒன்றை எடுத்தால் போதுமாகிறது. Tafenoquine மருந்தை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவித்துள்ளது.