சக்தியின் ஆடிவேல் பவனி

சக்தியின் ஆடிவேல் பவனி

by Chandrasekaram Chandravadani 22-07-2018 | 11:24 AM
Colombo (News 1st) தங்க வடிவேலனின் ஆடிவேல் கெப்பிட்டல் மகாராஜா தலைமைக் காரியாலயத்தை இன்று காலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து விசேட பூஜை ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், ஆடிவேல் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த 19 ஆம் திகதி தொண்டமானாறு - செல்வச்சந்நிதி தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பவனி, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, இன்று காலை கொழும்பு – ஜிந்துப்பிட்டி ஶ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது. அதன்பின்னர், கொழும்பு – ஜிந்துப்பிட்டி ஶ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து, MTV/MBC  தலைமைக் காரியாலயத்தை வந்தடைந்தது. ஆறுபடை வீடுகளில் சிறப்புப் பூஜை வழிபாடுகளை ஏற்று, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தளை, ஹட்டன் உள்ளிட்ட நகரங்களிலுள்ள முக்கிய ஆலயங்களில் வீற்றிருந்து தலைநகரை அடைந்த வேல் பெருமானுக்கு கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று சிறப்பான பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் புடைசூழ வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையகத்தை நோக்கி வேல் பெருமான் புறப்பட்டார். புறக்கோட்டையூடாக, கொம்பனித்தெரு ஶ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தினை ஆடிவேல் பவனி வந்தடைந்தது. ஆடிவேல் சக்திவேல் பவனி கொழும்பு - பிறேபுரூக் பிளேஸிலுள்ள கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தை வந்தடைந்தது. முருகப் பெருமானுக்கான சிறப்பு ஹோம, அபிஷேகப் பூஜைகளை, இலங்கையின் அந்தணப் பெருமக்களுடன் இணைந்து கசம்ஹாரத் திருத்தலமான திருச் செந்தூரில் இருந்து வருகைதந்த வேத விற்பனர்கள் சிறப்பாக நடாத்திவைத்தனர்.