கூகுள் நிறுவனத்திற்கு 4.3 பில்லியன் யூரோ அபராதம்

கூகுள் நிறுவனத்திற்கு 4.3 பில்லியன் யூரோ அபராதம்

by Bella Dalima 19-07-2018 | 4:29 PM
கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் 4.3 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் கைபேசி இயங்குதளத்திற்குள்ள செல்வாக்கை கைபேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரெஸல்ஸில் செய்தியாளர்களை நேற்று (18) சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார். முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இணையத்தள சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதான குற்றச்சாட்டில் கடந்த 2017-இல் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது, அது தொடர்பாக மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தி கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் மேன்முறையீடு செய்யும் என தெரிகிறது. இணையத்தளத்தில் பொருட்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதே பிரதான குற்றச்சாட்டாகும்.