ஆடி வேல் சக்தி வேல் பவனி ஆரம்பம்

அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் பெருமானை தாங்கிய 'ஆடி வேல் சக்தி வேல்' பவனி ஆரம்பம்

by Staff Writer 19-07-2018 | 9:04 PM
Colombo (News 1st)  முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய 'ஆடிவேல் சக்திவேல்' பவனி இன்று ஆரம்பமானது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் வேல் பவனி இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனியை முன்னிட்டு, யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி தேவஸ்தானத்தில் விசேட அபிஷேக பூஜை நடைபெற்றது. இதனையடுத்து, அன்னதானக் கந்தனின் மூலஸ்தானத்தில் வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் நிகழ்த்தப்பட வேல் பெருமான் சந்நிதானத்தை வலம் வந்தார். இதனைடுத்து, ஆடிவேல் சக்திவேல் பவனிக்காகவே சிறப்புற வடிவமைக்கப்பட்ட அலங்காரத் தேரில் வேல் பெருமான் எழுந்தருளினார். செல்வச்சந்திதி முருகன் ஆலயத்தில் ஆரம்பமான வேல்பவனி, நெல்லியடி நகரூடாக வதிரி முத்துக்குமாரசுவாமி ஆலயத்தை சென்றடைந்தது. கதிர்காம பாதயாத்திரையுடன் தொடர்புடைய முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் நாகர் கோவில் முருகையா தேவஸ்தானத்திலும் பவனி வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவிலை சென்றடைந்து, சாவகச்சேரியூடாக கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் பவனி வாகனம் தரித்து நின்றது. வேல் பெருமானை தரிசிப்பதற்கான வாய்ப்பு கிளிநொச்சி வாழ் மக்களுக்கும் இன்று கிட்டியது. இதனையடுத்து, வவுனியா கந்தசுவாமி கோவிலை சென்றடைந்த வேல்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வேல் பவனியின் நாளைய நாள் பயணம் வவுனியா கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகி, கொட்டகலையில் நிறைவடையவுள்ளது. ஆடிவேல் சக்திவேல் பவனி எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கெப்பிட்டல் மகாராஜா தலைமையக வளாகத்தை வந்தடையவுள்ளது. தலைமையக வளாகத்தில் வேல் பெருமான் எழுந்தருளச் செய்யப்படவுள்ளதுடன், விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 25 ஆம் திகதி வேல் பெருமான் கதிர்காமக் கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளார்.