பேர்பச்சுவல் உரிமையாளரின் மனு தொடர்பில் தீர்மானம்

பேர்பச்சுவல் நிறுவன உரிமையாளரின் பிணை மனு தொடர்பில் விரைவில் தீர்மானம்

by Staff Writer 18-07-2018 | 5:16 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பாலிசேன ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பீ. பத்மன் சூரசேன மற்றும் ஷிரானி குணரத்ன குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த கோரிக்கை தொடர்பில் எழுத்துமூல அறிவித்தல் வழங்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மனுதாரர் தரப்பின் எழுத்துமூல அறிவித்தல் தொடர்பில் எழுத்துமூல எதிர்ப்பை முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டனர். இதன்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, முறிகள் விவகாரத்துடன் தமது தரப்பினர் எவ்விதத் தொடர்பும் அற்றவர்கள் எனவும் முறிகள் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முறைகேடுகள் ஏதேனும் இடம்பெற்றிருக்குமாயின் அதற்கு இலங்கை மத்திய வங்கியே பொறுப்பு கூறவேண்டும் எனவும் மன்றில் குறிப்பிட்டார்.