அமைச்சரவை கூட்டங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்

அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்

by Staff Writer 18-07-2018 | 9:41 PM
Colombo (News 1st) வட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுயதாவது,
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சரவையிலுள்ள சில அமைச்சர்களின் ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான குழுவொன்றை அவரே நியமித்ததாகவும் குறித்த விசாரணைக் குழுவினூடாக சில அமைச்சர்கள் குற்றமுடையவர்களாக அடையாளங்காணப்பட்டதாகவும் கூறினார். இதனையடுத்து, நீதிமன்றத்தின் உதவியை நாடிய டெனிஸ்வரன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலுருந்தும் விடுதலை செய்யப்பட்டார். டெனிஸ்வரன் நீதிமன்றத்தை நாடியபோது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்கமைய அவருக்கு அவரது பொறுப்புக்களைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது. ஆளுநர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிற்கு செவிசாய்த்து கடிதம் மூலமாகவும் பதிவுத்தபால் மூலமாகவும் நேரடியாக அவரது கரங்களில் கையளித்தும் மின்னஞ்சல் மூலமாகவும் அனைத்து வழிகளிலும் கடிதத்தின் வாயிலாக நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பினை கருத்திற்கொண்டு செயற்படுவதற்கான அறிவுறுத்தல்களை எனக்கு வழங்குமாறு தான் முதலமைச்சரிடம் கோரியதாகவும் எனினும், இதுவரை அதற்கான எந்தவித அறிவுறுத்தல்களும் என் வசம் முதலமைச்சரினால் வழங்கப்படவில்லை எனக் கூறினார். இந்த நிலையில், நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அமுலிலுள்ள இந்தக் கால கட்டத்தில், இடைக்காலத் தடைக்கு அமைய ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்துவதைத் தவிர்க்குமாறு பிரதம செயலாளருக்கு தான் கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்