by Staff Writer 17-07-2018 | 10:14 AM
உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் சம்பியனான பிரெஞ்ச் அணி வீரர்கள் தமது சொந்த நாட்டை சென்றடைந்தனர்.
இதனிடையே, உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல்தடவையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 2ஆம் இடத்தைப் பிடித்த குரோஷிய அணி வீரர்களுக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்யா முன்னின்று நடத்திய 21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் 4 - 2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி பிரெஞ்ச் அணி சம்பியனானது.
பிரெஞ்ச் அணி உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட 2ஆவது சந்தர்ப்பமாக இது பதிவானது.
உலக சம்பியனாக முடிசூடிய பிரான்ஸ் வீரர்கள் நேற்று தமது சொந்த நாட்டை சென்றடைந்ததோடு, அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட பிரான்ஸ் வீரர்களை வாழ்த்துவதற்காக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸ் அணி வீரர்களை வாழ்த்துவதற்காக மில்லியன் கணக்கான மக்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கால்பந்தாட்ட சாம்ராஜ்ஜியத்தில் 2ஆவது தடவையாகவும் அரியாசனத்தில் அமர்ந்துள்ள பிரெஞ்ச் அணியினர் அந்நாட்டின் உயரிய Légion d'Honneur விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் இதனை அறிவித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அதேநேரம், குரோஷிய அணியை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்றும் அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அந்நாட்டு ரசிகர்கள் சுமார் 6 மணித்தியாலங்கள் சாக்ரேவ் விமான நிலையத்தில் குரோஷிய வீரர்களை வாழ்த்துவதற்காக காத்திருந்துள்ளனர்.
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரருக்கு பரிசளிக்கப்படும் தங்கக்கிண்ணத்தை குரொஷிய அணித்தலைவர் லூக்கா மெட்ரிக் வெற்றி கொண்டமையும் சிறப்பம்சமாகும்.
தொடரில் 2ஆம் இடத்தைப் பிடித்த குரோஷிய அணிக்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.