ஹெய்ட்டி பிரதமர் இராஜினாமா

ஹெய்ட்டி பிரதமர் ஜக் கே லபோன்டன்ட் இராஜினாமா

by Staff Writer 15-07-2018 | 8:54 AM
ஹெய்ட்டியில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து, பிரதமர் ஜக் கே லபோன்டன்ட் (Jack Guy Lafontant) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும் ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொண்டதாகவும் ஜக் கே லபோன்டன்ட் தெரிவித்துள்ளார். ஹெய்ட்டியில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டு மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்களின்போது, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஹெய்ட்டியில் பெற்றோலின் விலை 38 வீதத்தாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 47 வீதத்தாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 51 வீதத்தாலும் அதிகரிக்கப்படுவதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து, இடம்பெற்ற வன்முறைகளினால் குறைந்தது நால்வர் பலியாகியதுடன், பலர் காயமடைந்தனர். இந்தநிலையில், ஹெய்ட்டியின் அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி ஜொவனல் மொய்ஸ் (Jovenel Moise) மற்றும் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.