வட மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை
by Staff Writer 15-07-2018 | 9:35 PM
வடமராச்சி நெல்லியடி பகுதியிலுள்ள வட மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடமராச்சி நெல்லியடி பகுதியிலுள்ள வட மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகங்களை மூடி கையில் கத்தி மற்றும் தடிகளுடன் வந்த சிலர் தம்மை அச்சுறுத்தி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக வீட்டில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது வீட்டில் மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தனின் தாய், தந்தை மற்றும் அம்மம்மாவும் இருந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுகிர்தனின் தந்தை,
தன்னை அச்சுறுத்தி ஒரு அறையில் இட்டதாகவும் பின்னர் தடிகளால் தன்னைத் தாக்கியதாகவும் கூறினார். அதன்பின்னர் மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலி, வீட்டில் இருந்த 2 சோடி காப்பு, மற்றும் நெல் மூடையில் மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி என்பவற்றை திருடிச் சென்றதாகத் தெரிவித்த அவர், மொத்தமாக 15 பவுன் தங்கம் மற்றும் 50, 55,000 ரூபா காசும் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியபோது,
குறித்த வீட்டிலிருந்து திருடர்கள் 40,000 ரூபா காசை திருடிச் சென்றுள்ளதாகவும் எத்தனை பவுன் தங்கம் திருடப்பட்டுள்ளது என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனர்.