சி.வியின் விமானப் பயணச் செலவு வௌியிடப்பட்டுள்ளது

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமது விமானப் பயணங்களுக்கான செலவுகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்

by Staff Writer 15-07-2018 | 5:49 PM

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமது விமானப் பயணங்களுக்கான செலவுகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வாராந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் உதவியாளர் ஒருவருடன் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விமானம் மூலம் கொழும்பு சென்று வந்ததால் 20 இலட்சம் ரூபா பொது மக்களின் பணம் செலவாகியுள்ளதாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். உத்தியோகபூர்வ கடமையின் நிமித்தம் தாம் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கொழும்பு சென்று வந்தமைக்கு 11, 15,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப் பகுதியில் தம்முடன் வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்காக 6,94,000 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின்கீழ் இந்த விபரங்கள் கோரப்பட்டபோது தாமே அதனை வெளியிடுமாறு பணிப்புரை விடுத்ததாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துரிதமும் பாதுகாப்பும் உடல் வசதி ஆகிய காரணங்களினாலேயே விமானத்தில் பயணம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் கொழும்பிலிருந்து ஆகக்கூடிய தூரத்தில் மாகாண சபை அமைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணமாகும் என முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாகனங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பணம் செல்வதானால் 7 மணித்தியாலங்கள் தேவை எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், 7 மணித்தியாலங்கள் பயணம் செய்துவிட்டு அதே நாளோ மறு நாளொ உத்தியோகபூர்வ கூட்டங்களில் கலந்துகொள்வது வட மாகாண முதலமைச்சருக்கு மட்டும் உள்ள இக்கட்டாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதலமைச்சரும் தாமே என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் பாதுகாப்பு நிமித்தம் வழங்கிய அறிவுரையின் பிரதிபலிப்பாகவே விமானத்தில் பயணம் செய்ததாகவும் அப்போதைய ஆளுநர் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதைய ஆளுநர் 15 - 20 வரையிலான விசேட அதிரடிப்படையினரை அவரது பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்போது வாகன எரிபொருள், அதிரடிப் படையினரின் செலவுகள் பற்றி எவரும் மூச்சு விட வில்லை எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இளந்தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அத்தகைய பாதுகாப்பை கேட்டுப் பெற்றுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தன்னுடன் 2 அல்லது 3 பொலிஸாரே உள்ளூரில் பாதுகாப்பிற்கு வருவதாகவும் ஒருவரையே விமானப் பயணித்தின்போது அழைத்துச் செல்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விமானப் படையினரின் விமானப் பயணங்களின்போது பொலிஸாருக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.