பொறுப்புக்களை மீண்டும் ஒப்படையுங்கள்

அமைச்சுப் பொறுப்புக்களையும் ஆவணங்களையும் மீண்டும் ஒப்படைக்குமாறு விக்னேஷ்வரனுக்கு டெனீஸ்வரன் கடிதம்

by Staff Writer 14-07-2018 | 6:38 PM
Colombo (News 1st)  தான் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களையும் அது சார் ஆவணங்களையும் உடனடியாக தன்னிடம் மீண்டும் வழங்குமாறு கோரி வட மாகாண சபை உறுப்பினர் பா. டெனீஸ்வரன், வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு விலாசமிடப்பட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிற்கும் அவரின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7 ஆம் திகதி தான் வகித்த அமைச்சுப் பதவிகளை தன்னிடம் மீண்டும் வழங்குமாறு கோரி கடிதம் ஒன்றை டெனீஸ்வரன் முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தின் பிரதியுடன் தொடர்ச்சியாக குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் கையளிக்காத பட்சத்தில், நீதிமன்ற கட்டளையை மீறியதாக அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.