பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டிய நிலை

by Staff Writer 13-07-2018 | 2:07 PM
Colombo (News 1st) பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதியுடன் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எரிபொருளின் விலை அதகரிப்பானது, நேரடியாக பேக்கரி உற்பத்திகளை பாதிக்காது என்றபோதிலும், டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வௌிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் 50 வீதமானவை பேக்கரி உற்பத்திகளுக்கே பயன்படுத்தப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முட்டைகளின் விலைகளும் 16 - 50 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுவதால், பேக்கரி உற்பத்திகளின் விலை, எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என என்.கே. ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.