11 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மல்லாகம் சந்தியில் அமைதியின்மை: 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 13-07-2018 | 4:06 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் கடந்த 17 ஆம் திகதி மாலை அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. சந்தேகநபர்கள் சார்பில் நான்கு சட்டத்தரணிகள் இன்று மன்றில் ஆஜராகினர். கொலைச்சம்பவம் தொடர்பிலான பிரச்சினைகளை மறைப்பதற்காகவே பொலிஸார் சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியொருவர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே கடந்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது அங்கு சென்ற சுன்னாகம் பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. இதன்போது, 32 வயதான பாக்கியராசா சுதர்ஷன் என்பவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.