by Staff Writer 13-07-2018 | 1:55 PM
Colombo (News 1st) மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல், நீதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் 13 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைதிகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்ற ஆவணங்களுடன் ஒப்பிட்டதன் பின்னர் அறிக்கை தயாரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதிகள் மேன்முறையீடு செய்துள்ளதாலேயே நீதிமன்ற ஆவணங்களுடன் ஒப்பிடவேண்டிய தேவையுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைதிகளின் மேன்முறையீட்டைப் பரிசீலித்துள்ள நீதிமன்றம் அவர்களுக்கு மரணதண்டனைக்கு பதிலாக ஆயுட்தண்டனையை வழங்கியுள்ளது.
இறுதி அறிக்கை தயாரிக்கும்போது, இது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.
அனைத்துத் தரவுகளையும் ஆராய்ந்து தயாரிக்கப்படும இறுதி பெயர்ப்பட்டியல், ஜனாதியிடம் கையளிக்கப்படும் என நீதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அலுகோசு பதவிக்கு அடுத்த வாரமளவில் மீண்டும் விண்ணப்பங்களை கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலுகோசு பதவிக்கு 2 வெற்றிடங்கள் நிலவுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் அலுகோசு பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றது.
அதேநேரம், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.