படையினரிடமிருந்த காணிகளில் 94 வீதமானவை ஒப்படைப்பு

பாதுகாப்புப் படையினரிடமிருந்த காணிகளில் 94 வீதம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

by Staff Writer 12-07-2018 | 2:57 PM
Colombo (News 1st) வடக்கு கிழக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளில் 94 வீதமானவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 522 ஹெக்டேயர் நிலப்பரப்பு மட்டுமே விடுவிப்பதற்கு எஞ்சியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார். குறித்த காணிகளிலிருந்து வௌியேறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் சிக்கலினால் அவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாக இந்தத் தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் 65,133 ஹெக்டேயர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்படாத விதத்தில் வடக்கு கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படுவதாகவும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து சுட்டிக்காட்டியுள்ளார்.