இராணுவத்திற்கான செலவுநிதி: இரட்டிக்குமாறு கோரிக்கை

இராணுவத்திற்கான செலவு நிதியை இரட்டிக்குமாறு நேட்டோவை அமெரிக்கா வலியுறுத்தல்

by Staff Writer 12-07-2018 | 6:30 AM
இராணுவத்திற்காக செலவிடப்படும் நிதியை இரட்டிப்பாக்குமாறு நேட்டோவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதன்படி, நேட்டோவினால் இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி வீதத்தை 4 வீதமாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். பிரஸ்சல்சில் நடைபெறுகின்ற மேற்கத்தேய நாடுகளின் இராணுவ கூட்டணியின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜேர்மன் தமது பாதுகாப்புக்காக அதிக செலவினங்களை மேற்கொள்வதாகவும் ட்ரம்ப் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய 2 சதவீத இலக்கை, உறுப்பு நாடுகள் அடைய வேண்டுமென்பதில் முதலில் கவனம் செலுத்த வேண்டுமென நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பனிப்போர் இடம்பெற்று சுமார் 2 தசாப்தங்களின் பின்னர், நேட்டோ உறுப்பு நாடுகளிடையே காணப்பட்ட பதற்றநிலை தற்போது தணிந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அமெரிக்க மற்றும் ஐரோப்பாவிற்கிடையில் இராணுவ வீரர்களை பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஏற்கனவே ஐரோப்பாவை அமெரிக்கா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.