எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 11-07-2018 | 6:12 AM
Colombo (News 1st) எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மீண்டுமொருமுறை பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மாதந்தோறும் 10ஆம் திகதி எரிபொருள் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்தநிலைமையின் கீழ், பொதுப் போக்குவரத்து சேவைக்கட்டணத் திருத்தம் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் பலவற்றிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்த விலைசூத்திரம் தொடர்பில் தமக்கு தௌிவுபடுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பில் தம்முடன் கலந்துரையாடுமாறு நிதியமைச்சிடன் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதேவேளை, டீசல் விலை அதிகரிப்பு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பெரியதொரு பிரச்சினையாக உருவாகியுள்ளதாகவும் நிலைமையை சமாளிப்பது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தமது சங்கத்தினர் கலந்துரையாடி வருவதுடன், தமது இறுதித் தீர்மானம் குறித்து இன்று மதியத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். தமது சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் கே.டீ. அல்விஸ் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார். அதேநேரம், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தமது சங்கம் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.