அணி மாறினார் ரொனால்டோ

அணி மாறினார் ரொனால்டோ: 123.24 மில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம்

by Bella Dalima 11-07-2018 | 5:36 PM
Colombo (News 1st)  ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 9 ஆண்டுகளாக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியின் ஜுவென்டஸ் அணியில் இணைந்துள்ளார். கால்பந்து உலகில் கடந்த 10 ஆண்டுகளாக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவ்வாண்டின் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி வெளியேற்றப்பட்டது. கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் தோற்று போர்ச்சுகல் வெளியேறியது. 33 வயதான ரொனால்டோ சிறப்பாக விளையாடினாலும் நாட்டிற்காக பெரிய வெற்றியைக் குவிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணி வீரராக அறியப்பட்ட ரொனால்டோ, தற்போது இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜுவென்டஸ் அணிக்கு மாறியுள்ளார். ஜுவென்டஸ் அணி கடந்த நான்கு வருடங்களில் இரண்டு தடவைகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இரண்டு தடவைகளும் அந்த அணி இரண்டாம் இடத்தையே பிடித்தது. ரியல் மாட்ரிக் அணிக்காக 438 ஆட்டங்களில் விளையாடிய ரொனால்டோ, 451 கோல்களை அடித்துள்ளார். 16 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார். இந்நிலையில், நான்கு வருட ஒப்பந்தமாக ரொனால்டோ 123.24 மில்லியன் டொலர்களுக்கு ஜுவென்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.