FIFA அரையிறுதி நாளை ஆரம்பம் !

FIFA அரையிறுதி நாளை ஆரம்பம் !

by Staff Writer 09-07-2018 | 10:24 PM

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடருக்கான அரையிறுதிப்போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாளைய போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரஷ்யா , முன்னின்று நடத்தும் 21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற ஜேர்மன் அணி , இரண்டாமிடத்தைப் பிடித்த ஆர்ஜென்டின அணிகள் தொடரிலிருந்து வெளியேறியமை அந்த அணிகளின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதிக தடவைகள் சம்பியனாக முடிசூடிய பிரேசில் அணி காலிறுதியில் வெளியேறியமை ரசிகர்களின் உச்சபட்ச சோகத்தை பறைசாற்றுவதாய் அமைந்தது. இம்முறை தொடரில் ஒரு தங்க கிண்ணத்தை தனதாக்கிக் கொள்ள , நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன. முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து பிரான்ஸ் அணிகளுடன், பெல்ஜியம் மற்றும் குரோஷியா ஆகிய அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளன. சென் பீட்டர்ஸ்பேர்க் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் களமிறங்கவுள்ளன. நாளை மறுதினம்​ மொஸ்கோவில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் க்ரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள க்ரோஷிய அணி வீரர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி கொலின்டா கிட்டாரோவிக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காலிறுதிப் போட்டி வரை முன்னேறிய ரஷ்ய அணி வீரர்களை வாழ்த்தும் வகையில் பாராட்டு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.