தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 04 பேர்  மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 04 பேர் மீட்பு

by Staff Writer 09-07-2018 | 8:29 AM
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களில் மேலும் நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் 4 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மொத்தமாக 8 சிறுவர்கள் குகையிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் 13 சுழியோடிகளும், தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 சுழியோடிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடந்த முதல் கட்ட மீட்பு பணியில் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டதுடன், புதிய ஒக்ஸிஜன் கொள்கலங்களை மாற்றுவதற்காகவும், மீட்பு பாதையில் உள்ள வழிகாட்டி கயிறுகளை இறுக்கமாக கட்டுவதற்காகவும் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இன்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட மீட்புப் பணிகளில் மேலும் நால்வர் மீட்கப்பட்டுள்ள நிலையில் குகைக்குள் எஞ்சியுள்ள 4 சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க வேண்டியுள்ளதாக தாய்லாந்து கடற்படை அறிவித்துள்ளது.