by Staff Writer 09-07-2018 | 7:30 PM
இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் மாணவியை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவியை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த குற்றத்திற்காக மரண தண்டனை அனுபவித்துவரும் நால்வரில் மூவரால், தமது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவியொருவர் ஓடும் பஸ்ஸில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் பஸ்ஸிலிருந்து தள்ளி விடப்பட்டார்.
படுகாயமடைந்த மாணவிக்கு விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் மரணமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவன் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
சிறுவனுக்கு 3 வருடங்கள் சீர்திருத்த கல்வி வழங்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஏனைய நால்வருக்கும் மரணதண்டனை வழங்கி டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், மரணதண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.