அரியாலை வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயம்

யாழ். அரியாலை வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயம்

by Staff Writer 07-07-2018 | 9:37 AM
Colombo (News 1st) யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிப்பட்ட தகராறே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை இன்று யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட பிராந்தியத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 400க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சுற்றிவளைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.