காதர் மஸ்தானுக்கான வரவேற்பு நிகழ்விற்கு இடையூறு

முசலியில் காதர் மஸ்தானுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்விற்கு இடையூறு

by Staff Writer 07-07-2018 | 9:08 PM
Colombo (News 1st)  பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்காக மன்னார் - முசலி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்விற்கு, குறித்த பகுதியிலுள்ள அமைச்சரின் ஆதரவாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட காதர் மஸ்தானுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு முசலி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூட மண்டபத்தில் நிகழ்வினை நடத்துவதற்கான அனுமதி கடந்த 4 ஆம் திகதி வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியனினால் வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதிப்பத்திரத்தில் பாடசாலை அதிபரின் கையெப்பம் காணப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பாடசாலைக்கு சென்ற போது பாடசாலையின் கதவு மூடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்புகொள்ள பிரதேச மக்கள் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. இதன் பின்னர் நிகழ்வு பாடசாலை முன்றலில் நடைபெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.