கொழும்பு - காலி வீதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு - காலி பிரதான வீதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 07-07-2018 | 2:02 PM
Colombo (News 1st) கொழும்பு - காலி பிரதான வீதியின் ஹிக்கடுவை பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போன 7 மீனவர்களைத் தேடித்தருமாறு வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறியுள்ளார். கடந்த மாதம் 14 ஆம் திகதி குறித்த 7 பேரும் கடற்றொழிலுக்காக சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என தெரிவித்து நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹிக்கடுவ, தெல்வத்த, தொட்டகமுவ பகுதிகளை சேர்ந்தவர்களே கடற்றொழிலுக்காகச் சென்று காணாமற் போனவர்களாவர். கடந்த 14 ஆம் திகதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கடந்த 29 ஆம் திகதி வரையிலும் உறவினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.