வவுனியா, மன்னாருக்கு புதிய அரசாங்க அதிபர்கள்

வவுனியா, மன்னாருக்கு புதிய அரசாங்க அதிபர்கள் நியமனம்

by Bella Dalima 06-07-2018 | 4:10 PM
Colombo (News 1st)  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.எல்.எம். ஹனீஃபா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகித்த சோமரத்ன விதான பத்திரன காலி மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். வெற்றிடமாகியுள்ள வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு சம்மாந்துரை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எல்.எம். ஹனீஃபா நேற்று முன்தினம் (04) நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற நிகழ்வுகளை அடுத்து எஸ்.எல்.எம். ஹனீஃபா தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதேவேளை, மன்னார் அரசாங்க அதிபராக கிறிஸ்டோஃபர் அன்ரன் மோகன்ராஸ் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சோமரத்தின வித்தானகே பத்திரனவிடமிருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்டார். ஏற்கனவே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த எம்.வை. தேசப்பிரிய அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து தற்காலிகமாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரன நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கிறிஸ்டோபர் அன்ரன் மோகன்ராஸ் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இவர் வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.