போக்குவரத்துப் பிரிவு முகாமையாளருக்கு சிறைத்தண்டனை

தனியார் பஸ் உரிமையாளரிடம் 10,000 ரூபா கையூட்டு: மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவு முகாமையாளருக்கு சிறை

by Staff Writer 06-07-2018 | 4:32 PM
Colombo (News 1st)  வீதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் 10,000 ரூபா கையூட்டு பெற்றமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மேல் மாகாண போக்குவரத்து சபையின் போக்குவரத்துப் பிரிவு முகாமையாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க சிறைத்தண்டனையை விதித்துள்ளார். இதன் பிரகாரம், 5 வருடங்களில் பூர்த்தியாகும் வகையில் 40 வருட கடூழிய சிறைத்தண்டனை குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, இழப்பீட்டை வழங்கத்தவறும் பட்சத்தில் மேலும் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டுள்ளார். இதனைத் தவிர கையூட்டுப்பெற்ற 10,000 ரூபாவை அபராதமாக அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், குற்றவாளியிடமிருந்து 40,000 ரூபா அபராதமாக அறவிடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் கையூட்டுப் பெற்றதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.