ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை

பிரேரணை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

by Bella Dalima 04-07-2018 | 4:12 PM
Colombo (News 1st)  மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸுடனான கலந்துரையாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடிய இரா. சம்பந்தன், குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். மக்களின் காணிகளை சுவீகரித்துள்ள இராணுவம், அங்கு பண்ணைகள் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்பதையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் இத்தகைய பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலகியிருக்க வேண்டும் எனவும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் எடுத்துக்கூறியுள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் டெரன்ஸ் டி ஜோன்ஸுக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமானது தீவிரவாதப் போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தினை வழங்குகின்றமை, இனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், பாரிய குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். கடந்த கால சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிசெய்யும் வகையில், புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்படுவதன் அவசியத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதன்போது வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும், 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரிதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.