ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வு

ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வு

by Staff Writer 04-07-2018 | 8:22 AM
Colombo (News 1st) இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. திடீர்விபத்து காரணமாக நாளாந்தம் 5,000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். நாளாந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் மற்றும் வீதி விபத்துகளின் மூலமே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். வாகனத்தை செலுத்தும்போதான கவனக்குறைவு, விபத்து சம்பவிக்கக்கூடிய பகுதிகளில் கவனக்குறைவாக செயற்படுதல் போன்ற சம்பங்களே விபத்துகள் சம்பவிப்பதற்கான பிரதான காரணியாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கவனக்குறைவு மற்றும் அவதானமின்மை தொடர்பில் சாரதிகள் கருத்தில் கொள்வதில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார். விபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படும் பட்சத்தில் விபத்துகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் வாகனங்கள் செலுத்தும்போது கவனக்குறைவின்றி செயற்படுமாறும் வைத்தியர் மேலும் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு வருடமும் 18 இலட்சம் பேர் வீதி விபத்துக்களுக்குள்ளாகி சிகிச்சை பெறுவதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.