by Bella Dalima 04-07-2018 | 5:28 PM
இந்தோனேசியாவில் நேற்று (03) நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலாவேஸி தீவு பகுதியில் 164 பேருடன் பயணித்த படகு நேற்று விபத்திற்குள்ளானது.
படகில் பயணம் செய்தவர்களில் 12 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
விபத்திற்குள்ளான படகில் 48-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இருந்துள்ளன.
விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றியதே விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், படகில் பயணம் செய்தவர்களில் மேலும் 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
படகில் விபத்து ஏற்பட்டதும் படகை ஓட்டிச்சென்றவர் அருகாமையில் இருந்த பாறை மீது படகைச் செலுத்தி, படகு நீரில் மூழ்காமல் இருக்க முயற்சித்துள்ளார்.
இதனால், படகில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களில் பலர் பத்திரமாக படகில் இருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் படகில் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.