கடனில் $5M-ஐ செலுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை இணக்கம்

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய கடனில் 5 மில்லியன் டொலரை செலுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை இணக்கம்

by Bella Dalima 04-07-2018 | 3:43 PM
Colombo (News 1st)  விமான எரிபொருளுக்காக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகையில் 5 மில்லியன் டொலரை அடுத்த வாரம் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை இணக்கம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையின் பின்னர் எரிபொருளுக்காக வழங்க வேண்டிய பணத்தை கட்டம் கட்டமாக வழங்குவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை இணங்கியதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் கொள்வனவிற்காக ஶ்ரீலங்கன் விமான சேவை 87.5 மில்லியன் அமெரிக்க டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை நாணய பெறுமதியில் இது 13.45 பில்லியன் ரூபாவாகும். கடன் தொகையில் 5 மில்லியன் டொலரை அடுத்த வாரம் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை இணங்கியுள்ளதாக பெட்ரொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எஞ்சிய தொகையை செலுத்துவதற்காக தனியார் வங்கியொன்றில் கடனைப் பெற அமைச்சரவையின் அனுமதியைக் கோரவும் ஶ்ரீலங்கன் விமான சேவை இணக்கம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.