ஒரே குடும்பத்தினர் 11பேர் சடலமாக மீட்பு

இந்தியாவில் ஒரே குடும்பத்தினர் 11 பேர் சடலமாக மீட்பு

by Chandrasekaram Chandravadani 02-07-2018 | 7:16 AM
இந்தியத் தலைநகர் தில்லியில் வீடு ஒன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 10 பேரின் உடல்கள்  சிவிலிங்கில் தொங்கியநிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் இருவர் சிறுவர்களாவர். அதேநேரம், கூடுதலானவர்களின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. இதுவொரு மதம் சார்ந்த செயன்முறையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவத்துக்கான காரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. புராரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அவர்களது வீட்டு செல்லப்பிராணியான நாய் மட்டுமே உயிருடன் காணப்பட்டுள்ளது. இந்தநிலையில், பலியானவர்கள் மீதான பிரேதபரிசோதனை ஆரம்பமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதி முழுவதும் அச்சம் நிறைந்து காணப்படுவதாக பி.பி.சி. செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ராஜஸ்தானைப் பூர்வீமாகக் கொண்ட குறித்த குடும்பத்தினர், கடந்த 20 வருடத்துக்கும் அதிக காலம் தில்லியில் வசித்து வருகின்றனர். மூன்று மாடிக் கட்டத்தில் வசிக்கும் இவர்கள், மாடியின் கீழ்ப்பகுதியில் இரண்டு கடைகளை நடத்திவந்தனர். நேற்று காலையில் பால் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்ற அயலவரான கர்சரன் சிங் என்பவர் சடலங்களைக் கண்டுள்ளார். நான் கடைக்குள் சென்றபோது அனைத்து கதவுகளும் திறந்திருந்ததாகவும் அனைவரது உடல்களும் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், சிவிலிங்கில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் கர்சரன் சிங் பி.பி.சிக்குத் தெரிவித்திருந்தார். இது நிச்சயமாக குறித்த குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மத ரீதியான செயன்முறை என பொலிஸாரின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக NDTV தெரிவித்துள்ளது.