சட்டமூலம் தாமதமடைவதால் விசாரணை தாமதம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் தாமதமடைவதால் விசாரணை நடவடிக்கைகள் தாமதம்

by Bella Dalima 29-06-2018 | 3:37 PM
Colombo (News 1st)  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் தாமதமடைவதால், விசாரணை நடவடிக்கைகள் மேலும் தாமதமடைவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுக்கும் அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும், அது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாததால், அதனை விவாதத்திற்கு எடுததுக்கொள்வதில் தாமதம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணை, பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் மற்றும் அவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன இதனால் தாமதமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சட்டமூல விவாதம் தொடர்பில் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், உரிய காலத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை அவசியம் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.