சிறுத்தை கொலை: 10 பேருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் சிறுத்தை கொலை: 10 பேருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 29-06-2018 | 4:57 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் சிறுத்தை ஒன்றை சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக இன்று 3 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அம்பாள்குளம் கிராமத்திற்குள் கடந்த 21 ஆம் திகதி நுழைந்த சிறுத்தை தாக்கியதில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சிறுத்தை கொல்லப்பட்ட நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இதன்போது, கிராம மக்களால் சிறுத்தை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காணொளிகளும், நிழற்படங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், சிறுத்தையை சித்திரவதை செய்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய, 5 கிராமங்களை சேர்ந்தவர்கள் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து, அவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்