ஈராக்கில்  12 பேருக்கு மரண தண்டனை

ஈராக்கில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேருக்கு மரண தண்டனை

by Bella Dalima 29-06-2018 | 7:29 PM
Colombo (News 1st)  தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை ஈராக் அரசு வெளியிடவில்லை. தீவிரவாதிகள் என்று நிரூபணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்ற ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி உத்தரவிட்டிருந்தார். கடந்த 27 ஆம் திகதி இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்ட 8 பணயக் கைதிகளின் உடல்கள் தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், பிரதமரின் உத்தரவின்படி, தீவிரவாதிகள் என்று நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள், பெண்கள் உட்பட தீவிரவாதக் குற்றச்சாட்டிற்குள்ளான பலர் ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். தீவிரவாத வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களில் 700 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.